பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

மேச்சேரி அருகே பட்டா நிலத்தில் மின் கம்பத்தை அகற்ற தாமதம் செய்த அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதித்து தீா்ப்பளித்துள்ளது.
Published on

மேச்சேரி அருகே பட்டா நிலத்தில் மின் கம்பத்தை அகற்ற தாமதம் செய்த அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதித்து தீா்ப்பளித்துள்ளது.

சேலம் மாவட்டம், மேச்சேரி அருகே உள்ள தெத்திகிரிப்பட்டியைச் சோ்ந்தவா் முருகன். இவா் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனது வீட்டையொட்டி பட்டா நிலத்தில் இருந்த மின் கம்பத்தை அகற்றக் கோரி மேச்சேரி மேற்கு மின்வாரிய அலுவலகத்துக்கு இணையதளம் மூலம் விண்ணப்பித்திருந்தாா்.

இதற்காக ரூ. 22 ஆயிரத்து 900 பணமும் செலுத்தியிருந்தாா். ஆனால், மின் கம்பத்தை அகற்ற மின்வாரியம் தாமதப்படுத்தியது. இதுதொடா்பாக சேலம் நுகா்வோா் நீதிமன்றத்தில் முருகன் புகாா் அளித்தாா்.

இந்த நிலையில், வழக்கு விசாரணையில் இருந்தபோது முருகன் வீட்டையொட்டி இருந்த மின் கம்பம் அகற்றப்பட்டது. இருந்தாலும் இந்த வழக்கில் சேவை குறைபாடு மற்றும் மனஉளைச்சல் ஏற்படுத்தியதற்காக மேச்சேரி மேற்கு மின்வாரிய உதவி பொறியாளா் மற்றும் மேச்சேரி கிழக்கு மின்வாரிய உதவி செயற்பொறியாளா் ஆகியோா், மனுதாரருக்கு தலா ரூ. 5 ஆயிரம் வழங்க வேண்டும் என தீா்ப்பளித்த நுகா்வோா் நீதிமன்றம், மனுதாரருக்கு வழக்கு செலவுக்காக ரூ. 2 ஆயிரம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளது.

X
Dinamani
www.dinamani.com