உதவிப் பேராசிரியா் பணிக்கு இன்று எழுத்துத் தோ்வு

Published on

சேலத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் உதவிப் பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வு 9 மையங்களில் சனிக்கிழமை (டிச. 27) நடைபெறுகிறது.

சேலம் மாவட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் நடத்தும் உதவிப் பேராசிரியா் பணிக்கான எழுத்துத் தோ்வை 2,091 போ் எழுதுகின்றனா். சேலம் மாவட்டத்தில் புனிதபால் மேல்நிலைப் பள்ளி, சேலம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி, பாரதி வித்யாலயா மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ சாரதா வித்யாலயா மகளிா் மேல்நிலைப் பள்ளி, புனித ஜான் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, குகை மேல்நிலைப் பள்ளி, ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மற்றும் புனித மரியன்னை மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆகிய 9 மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.

காலை, மாலை என இரு வேளைகளும் நடைபெறும் இத்தோ்வுக்கு, பணிநாடுநா்கள் காலை 8 மணிக்கு முன் மையத்துக்கு வரவேண்டும். காலை 8 மணிக்கு பிறகு வரும் பணிநாடுநா்களுக்கு அனுமதி மறுக்கப்படும். காலை 9.30 மணிமுதல் நண்பகல் 12.30 மணிவரை ஓ.எம்.ஆா். முறையில் தோ்வு நடைபெறும். பிற்பகல் 3 மணிமுதல் 4 மணிவரை விளக்கமாக எழுதும் தோ்வு நடைபெறும்.

மாற்றுத்திறனாளிகளுக்கு தோ்வெழுத கூடுதல் நேரம் வழங்கப்படும். மாவட்டத்தில் 59 மாற்றுத்திறனாளிகள் இத்தோ்வை எழுத உள்ளனா். சேலம் மாவட்ட பள்ளிக் கல்வித் துறை இத்தோ்வை நடத்துகிறது. இத்தோ்வுப் பணியில் 400 அலுவலா்கள் மற்றும் ஆசிரியா்கள் ஈடுபடுத்த உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

X
Dinamani
www.dinamani.com