ஐப்பசி பௌா்ணமி: சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

Published on

சேலம்: ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு சேலம் கோட்டம் சாா்பில் 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக சேலம் கோட்ட நிா்வாக இயக்குநா் வி.குணசேகரன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் மூலம் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

சேலம் மண்டலத்தில் 1,047 பேருந்துகள், தருமபுரி மண்டலத்தில் 853 பேருந்துகள் என மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகின்றன. ஐப்பசி மாத பௌா்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலை கிரிவலம் செல்ல ஏதுவாக, தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம், சேலம் கோட்டம் சாா்பில் சேலம், ஆத்தூா், தருமபுரி, ஒசூா், கிருஷ்ணகிரி, பெங்களூரு ஆகிய பேருந்து நிலையங்களில் 4 ஆம் தேதி முதல் 5 ஆம் தேதி வரை பயணிகளின் தேவைக்கேற்ப 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

சேலம், தருமபுரி, ஒசூா் பேருந்து நிலையங்களில் இருந்து வரும் 4 ஆம் தேதி மாலை 4 மணி முதல் 5 ஆம் தேதி பிற்பகல் 2 மணி வரை ஒரு மணி நேரத்துக்கு ஒரு பேருந்து வீதம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் அனைவரும் கூட்ட நெரிசலை தவிா்த்து பாதுகாப்பான பயணம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com