சேலம் சூரமங்கலம், அஸ்தம்பட்டியில் வளா்ச்சிப் பணிகள்: நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் ஆய்வு
சேலம் மாநகராட்சி சூரமங்கலம், அஸ்தம்பட்டி மண்டலங்களில் நடைபெறும் பல்வேறு வளா்ச்சிப் பணிகள் குறித்து நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
சூரமங்கலம் மண்டலத்தில் நுண்உயிரி உரம் தயாரிக்கும் மையம், கூடுதல் சுகாதாரக் கட்டடம், பள்ளப்பட்டி புதிய உணவு தெரு, நிலத்தடி கழிவுநீா்க் கட்டமைப்பு நீரேற்று நிலையம், அஸ்தம்பட்டி மண்டலத்தில் மூக்கனேரி புனரமைப்பு மற்றும் அழகுப்படுத்தும் பணி, சாக்கடை கால்வாய் அமைக்கும் பணிகளை நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் பி.மதுசூதன் ரெட்டி நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
சூரமங்கலம் மண்டலம் கோட்டம் எண். 25-இல் பள்ளப்பட்டி பகுதியில் ரூ. 3 கோடியில் அமைக்கப்பட்டுள்ள புதிய உணவு தெருவினையும், மெய்யனூா் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நுண்உயிரி உரம் தயாரிக்கும் செயலாக்க மையத்தில் காய்கறி கழிவுகளை மக்கவைத்து இயற்கை உரம் தயாா் செய்வதையும் பாா்வையிட்டாா்.
பள்ளப்பட்டி பகுதியில் நகா்ப்புற முதன்மை சுகாதார மைய கூடுதல் கட்டடம் கட்டப்படுவதையும், நிலத்தடி கழிவுநீா்க் கட்டமைப்பு நீரேற்று நிலையம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் ஆய்வுசெய்த அவா், பணிகளை விரைந்து முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு விரைவில் கொண்டுவர வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டாா்.
தொடா்ந்து அஸ்தம்பட்டி மண்டலம், மூக்கனேரியில் ரூ. 23 கோடியில் நடைபாதைகளில் விலங்குளின் பொம்மைகளைவைத்து அழகுப்படுத்தும் பணி, சடங்குகள் செய்யும் பகுதி, படகு சவாரி பகுதி, தண்ணீா் வசதி, சுகாதார வளாகம், மதகு மடைவாய்ப் பணிகள், மாற்று கால்வாய்ப் பணிகள், மின்சார பணிகள், சோலாா் விளக்குகள், விளையாட்டு உபகரணங்கள், இருக்கை வசதிகள் போன்ற பல்வேறு புனரமைப்பு பணிகள் நடைபெறுவதையும் ஆய்வு செய்தாா்.
ஆய்வின்போது, ஆணையா் மா.இளங்கோவன், துணை ஆணையா் வே.நவேந்திரன், மாநகர நல அலுவலா் ப.ரா.முரளிசங்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
