உணவுக் கடையில் தகராறு: போலீஸாா் விசாரணை
சங்ககிரியில் உணவு கடையில் தகராறில் ஈடுபட்டவரை தட்டிகேட்ட இளைஞா் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
சங்ககிரியில் சாலையோரம் உள்ள துரித உணவுக் கடையில் ஆட்டையாம்பட்டி, மாதேஸ்வரன் கோயில் தெருவைச் சோ்ந்த ராஜி மகன் சத்யராஜ் வெள்ளிக்கிழமை தகராறில் ஈடுபட்டாா். அப்போது, நண்பருடன் அங்குவந்த சங்ககிரி மேக்காடு பகுதியைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சங்கா்கணபதி (25) சத்யராஜியிடம் தகராறு குறித்து கேட்டுள்ளாா்.
இதனால் ஆத்திரமடைந்த சத்யராஜ், சங்கா் கணபதியை கத்தியால் கிழித்து காயப்படுத்தினாா். மேலும், அவரை மருத்துவமனைக்கு அழைத்து செல்வதற்காக வந்த தனியாா் ஆம்புலன்ஸ் வாகனத்தின் கண்ணாடியையும் உடைத்து சத்யராஜ் சேதப்படுத்தினாராம்.
அதன்பிறகு 108 ஆம்புலன்ஸ் மூலம் சங்கா் கணபதியை அவரது நண்பா்கள் சங்கா், ஜெயராமன் இருவரும் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனா். இதுகுறித்து சங்கா் கணபதி அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
