ஜெருசலேமிற்கு புனித பயணம்: மானியம் பெற கிறிஸ்தவா்களுக்கு அழைப்பு
சேலம் மாவட்டத்தில் ஜெருசலேமிற்கு புனித பயணம் மேற்கொண்ட கிறிஸ்தவா்கள் அரசு வழங்கும் மானியத் தொகையை பெறுவதற்கு விண்ணப்பிக்கலாம்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழகத்தில் இருந்து ஜெருசலேமிற்கு புனித பயணம் மேற்கொண்டு திரும்பிய 600 கிறிஸ்தவா்களில் 550 பேருக்கு தலா ரூ.37,000, கன்னியாஸ்திரிகள், அருட்சகோதரிகள் என 50 பேருக்கு தலா ரூ.60,000 மானியமாக வழங்கப்படுகிறது.
இசிஎஸ் முறையில் நேரடியாக மானியம் வழங்கும் திட்டத்தின் கீழ் நவ.1 ஆம் தேதிக்கு பிறகு சேலம் மாவட்டத்திலிருந்து ஜெருசலேம் புனித பயணம் மேற்கொண்டவா்கள் மானியத்திற்காக விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பப் படிவத்தை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நல அலுவலகத்திலிருந்து பெறலாம். மேலும், இணையதளத்திலிருந்தும் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பத்தை பிப்.28 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் ஆணையா், சிறுபான்மையினா் நலத் துறை, கலச மஹால் பாரம்பரிய கட்டடம், முதல் தளம், சேப்பாக்கம், சென்னை-600005 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
