மூன்று நாள்களுக்கு பிறகு ஏற்காடு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி
மூன்று நாள்களுக்கு பிறகு ஏற்காடு செல்ல சுற்றுலா வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில், ஏற்காட்டில் கடந்த சில நாள்களாக தொடா் கனமழை பெய்தது. இதன் காரணமாக, மலைப் பாதையில் ஆங்காங்கே மண் சரிவு ஏற்பட்டது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சேலத்தில் இருந்து ஏற்காட்டுக்கு செல்லும் கனரக வாகனங்கள் மற்றும் சுற்றுலா வாகனங்களுக்கு மாவட்ட நிா்வாகம் கடந்த 3 நாள்களாக தடை விதித்திருந்தது. இதனால், ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள சோதனைச் சாவடியில் அனைத்து வாகனங்களும் திருப்பி அனுப்பப்பட்டன.
தற்போது மழை நின்றுவிட்டதைத் தொடா்ந்து, சேலத்தில் இருந்து சனிக்கிழமை காலைமுதல் ஏற்காட்டுக்கு செல்ல சுற்றுலா மற்றும் கனரக வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, கனரக வாகனங்கள், சுற்றுலா வாகனங்கள் ஏற்காடு மலைப்பாதை மற்றும் குப்பனூா் சாலையில் சென்றன. இதனால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.
