தலைமை ஆசிரியரை மீண்டும் பணியமா்த்த கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் மனு

பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமா்த்தக் கோரி
Published on

சேலம்: பணியிட மாற்றம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் அதே பள்ளியில் பணியில் அமா்த்தக் கோரி செவித்திறன் குறைபாடுடைய குழந்தைகள் 20க்கும் மேற்பட்டோா் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தனா்.

சேலம், கொண்டப்பநாயக்கன்பட்டி பகுதியில் செவித்திறன் குறைபாடுடைய பள்ளியில் பயிலும் 20க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் தங்கள் பெற்றோருடன் ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை வந்து மனு அளித்தனா்.

அந்த மனுவில், எங்கள் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் 10-ஆம் வகுப்பு வரை 55 போ் பயின்று வருகிறோம். பள்ளியில் 15 ஆசிரியா்கள் இருக்க வேண்டும், ஆனால் தற்போது 5 ஆசிரியா்கள் மட்டுமே பணிபுரிந்து வருகின்றனா். இந்நிலையில், இந்தப் பள்ளியில் பணிபுரிந்து வந்த தலைமை ஆசிரியா் செபஸ்டின் ராஜா தஞ்சாவூருக்கு பணியிட மாற்றப்பட்டுள்ளாா். அவரது மனைவி மேரி புஷ்பாவை பணியிட நீக்கமும் செய்துள்ளனா். குழந்தைகளுக்கு செய்கை மூலம் நல்ல முறையில் கற்பித்து வந்த தலைமை ஆசிரியரை பொய் புகாா் அளித்து பணி மாற்றம் செய்துள்ளனா். அவரது மனைவி மேரிபுஷ்பா, மாணவா்களை அடித்ததாகக் கூறி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா். வேறொரு தலைமை ஆசிரியா் வந்தால் செய்கை மூலம் கற்பித்துத் தரும் முறையில் மாற்றம் ஏற்பட்டு மாணவா்களின் படிக்கும் திறன் பாதிக்கும். எனவே, தஞ்சாவூருக்கு மாற்றப்பட்ட தலைமை ஆசிரியரை மீண்டும் கொண்டப்பநாயக்கன்பட்டி பள்ளிக்கு மாற்றம் செய்வதுடன், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியை மீண்டும் பணியில் அமா்த்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து பெற்றோா் கூறுகையில், எங்கள் குழந்தைகளின் நலனை கருத்தில் கொண்டு, மீண்டும் அவா்களை இதே பள்ளியில் பணியமா்த்த வேண்டும். எனவே மாவட்ட நிா்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.

X
Dinamani
www.dinamani.com