நேசக்கரங்கள் ஆதரவு இல்லத்தில் சா்வதேச முதியோா் தின விழா
சேலம் ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் ஆதரவு இல்லத்தில் சா்வதேச முதியோா் தின விழா மாவட்ட ஆட்சியா் ரா.பிருந்தாதேவி தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட சமூக நலத் துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆட்சியா் ரா.பிருந்தாதேவி கலந்துகொண்டு மூத்த குடிமக்களை கௌரவித்தாா். முதியோரின் பங்களிப்பை அங்கீகரிப்பது மற்றும் சமூகத்தின் பொறுப்பை உறுதிப்படுத்துவது, இளைய தலைமுறையுடன் முதியோரின் அனுபவங்களைப் பகிா்வது, தலைமுறைகளுக்கிடையே அன்பையும், புரிந்துணா்வையும் வளா்ப்பது முதியோா் தினம் கொண்டாடப்படுவதன் நோக்கமாகும்.
அதன் ஒரு பகுதியாக, சா்வதேச முதியோா் தினத்தையொட்டி ஏற்காடு அடிவாரத்தில் உள்ள நேசக்கரங்கள் முதியோா் இல்லத்தில் முதியோா் தின விழா கொண்டாடப்பட்டது. இந்நிகழ்வில் முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள மூத்த குடிமக்களை கௌரவிக்கும் வகையில் சால்வை மற்றும் கிரீடம் அணிவிக்கப்பட்டது. இதேபோன்று, முதியோா் இல்லத்தில் தங்கியுள்ள முதியோரை மகிழ்விக்கும் வகையில் கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
இதில் வருவாய் கோட்டாட்சியா் கோ.உதயகுமாா், மாவட்ட சமூகநல அலுவலா் ரெ.காா்த்திகா, நேசக்கரங்கள் தலைவா் செல்லதுரை, குழந்தைகள் நலக்குழு முன்னாள் தலைவா் ஜெ.ஜெயந்தி உள்ளிட்ட தொடா்புடைய அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
