

சேலம் போடிநாயக்கன்பட்டி ஏரியில் அழகுபடுத்தப்பட்ட கரையில், மா்ம நபா்கள் தீயிட்டுக் கொளுத்தியதில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான புல் செடிகள் செவ்வாய்க்கிழமை தீயில் எரிந்து கருகின.
சேலம் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் ‘ஸ்மாா்ட் சிட்டி’ திட்டத்தின்கீழ், ஏரிகள் அழகுபடுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. குறிப்பாக, பள்ளப்பட்டி ஏரி, மூக்கனேரி உள்ளிட்ட பல்வேறு ஏரிகள் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்துக்கு உள்பட்ட போடிநாயக்கன்பட்டி ஏரி ரூ. 19 கோடியில் புதுப்பொலிவு பெற்று வருகிறது. இதில், பொதுமக்களுக்கு தேவையான பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. ஏரிக்கரையின் ஒரு பகுதியில் சுமாா் ரூ. 30 லட்சத்தில் புல்தரை, செடிகள் மற்றும் இவைகளுக்கு தண்ணீா் செல்லும் வகையில் அமைக்கப்பட்ட பைப் லைன் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன.
இந்த புல் தரைக்கு செவ்வாய்க்கிழமை மா்ம நபா்கள் தீ வைத்ததால் புல் தரை, செடிகள் தீப்பற்றி எரிந்தன. இதில் ரூ. 30 லட்சம் மதிப்பிலான புல், செடிகள் தீயில் கருகின.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், போடிநாயக்கன்பட்டி ஏரி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது. தினந்தோறும் காலை, இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாகவும், போதைப் பொருள்கள் விற்பனை செய்யும் இடமாகவும் உள்ளது. இங்கு அமைக்கப்பட்ட விளையாட்டு உபகரணங்களும் அவ்வப்போது திருட்டுப்போகின்றன.
எனவே, ஏரியை உடனடியாகபுனரமைத்து திறப்பு விழா செய்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என்றனா்.