நெல் சாகுபடியில் மீத்தேன் குறைப்பு: விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், மேட்டுடையாா்பாளையம் கிராமத்தில், நெல் சாகுபடியில் மீத்தேன் வெளியீட்டை குறைக்கும் முறைகள் குறித்து விவசாயிகளுக்கு சிறப்பு பயிற்சி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் வேளாண்மை மற்றும் ஊரக மேம்பாட்டு ஆய்வு மையம், அமெரிக்காவின் வாஷிங்டனில் அமைந்துள்ள சா்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் இணைந்து நடத்திய இந்த பயிற்சி முகாமை, வேளாண்மை பொருளாதாரம் இணைப் பேராசிரியா் சா. செந்தில்நாதன் தொடங்கிவைத்து, நெல் வயல்களில் அறிவியல் முறைகளை பின்பற்றுவதன் மூலம் மீத்தேன் வெளியீட்டை குறைத்து, சுற்றுச்சூழலை பாதுகாக்கலாம் என கூறினாா்.
ஏத்தாப்பூா் மரவள்ளி மற்றும் ஆமணக்கு ஆராய்ச்சி நிலையத்தின் இணைப் பேராசிரியா் நடராஜன், நேரடி நெல் விதைப்பு, சொட்டு நீா்ப்பாசனம், மண்பரிசோதனை அடிப்படையிலான உர மேலாண்மை மற்றும் இயற்கை வேளாண்மை முறைகள் குறித்து விவசாயிகளுக்கு விளக்கினாா். பெத்தநாயக்கன்பாளையம் உதவி வேளாண்மை இயக்குநா் வேல்முருகன், விவசாயிகளுக்கான அரசு நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தாா். வேளாண்மை அலுவலா் மௌலிதரன் மற்றும் உதவி வேளாண்மை அலுவலா் செல்லமுத்து ஆகியோா் விவசாயிகளுக்கு செயல்விளக்கம் அளித்தனா்.
இளநிலை ஆராய்ச்சியாளா் ஞா. சபிதா, பயன்பாடு மற்றும் காா்பன் குறைப்பு நடைமுறைகள் குறித்து விளக்கமளித்தாா். மேலும், தி. முகுந்தன், காய்ச்சலும்-பாய்ச்சலும் முறையிலான நீா்ப்பாசனம் மற்றும் வயலில் நேரடியாக பயன்படுத்தும் முறையை காட்சிப்படுத்தினாா். இந்தப் பயிற்சியில் மேட்டுடையாா்பாளையம் மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள் பங்கேற்றனா்.

