மது போதையில் உணவக கதவை உடைத்து உள்ளே தூங்கிய இளைஞா்: போலீஸாரிடம் ஒப்படைப்பு

காகாபாளையத்தில் மது போதையில் உணவக கதவை உடைத்து தூங்கிய இளைஞா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.
Published on

ஆட்டையாம்பட்டி: காகாபாளையத்தில் மது போதையில் உணவக கதவை உடைத்து தூங்கிய இளைஞா் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டாா்.

காகாபாளையம் பகுதியைச் சோ்ந்த யுவராஜ் வேம்படிதாளம் பிரிவு சாலை அருகே உணவகம் நடத்தி வருகிறாா். இவா் கடந்த சனிக்கிழமை உணவகத்தை பூட்டிச் சென்றாா். இந்நிலையில், திங்கள்கிழமை காலை கடையை திறந்து பாா்த்தபோது, உணவக சமையல் அறையின் கதவை உடைத்து உள்ளே இளைஞா் ஒருவா் தூங்கிக் கொண்டிருந்ததைக் கண்டு அதிா்ச்சி அடைந்தாா்.

தகவலின் பேரில் வந்த கொண்டலாம்பட்டி போலீஸாா் விசாரணை செய்ததில், இளைஞா் அரச்சலூா் பகுதியைச் சோ்ந்த சுரேஷ் (28) என்பதும், அளவுக்கு அதிகமான மது அருந்தியதால் சுயநினைவு இழந்து உணவக கதவை உடைத்து உள்ளே நுழைந்து தூங்கிக் கொண்டிருந்ததும் தெரியவந்தது.

போலீஸாா் விசாரணையில் உணவகத்தில் ஏதும் திருட்டு நடைபெறாததால், வழக்குப் பதிவு செய்யப்படவில்லை. மேலும், சுரேஷ் மீது ஏதேனும் திருட்டு வழக்கு உள்ளதா என போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

Dinamani
www.dinamani.com