கொடைக்கானல், பிப்28: கொடைக்கானல் செண்பகனூர் திரு இருதய கல்லூரி வளாகத்தில் இயற்கையை பாதுகாப்போம் மற்றும் வாழ்க்கையை பாதுகாப்போம் என்னும் கருத்தரங்கு நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி அதிபர் ஆரோக்கியம் தலைமை வகித்தார். பணியாளர் சேவியர்ராஜ் வரவேற்றார். கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகப் பதிவாளர் மணி கருத்தரங்கை துவக்கி வைத்துப் பேசியதாவது:
தேவைக்கு அதிகமான கட்டடங்களாலும், மரங்களை அழிப்பதாலும், நிலத்தடி நீரை வீணாக்குவதாலும், வளி மண்டலம் பாதிக்கப்படுவதால் புற ஊதாக் கதிர்கள் வாழ்க்கைச் சூழலை கெடுத்து நமக்கு நோய்களை உண்டாக்குகிறது.
இந்தச் சூழ்நிலையை மாற்றுவதற்கு நாம் மரக் கன்றுகளை நடவேண்டும். விழாக்கள் மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நாம் மரக்கன்றுகளை நட்டு பசுமையை வளர்த்துப் பாதுகாக்க வேண்டும் என்றார்.
மேலும் இக் கருத்தரங்கில் கொடைக்கானல் பகுதிகளைச் சேர்ந்த புனித சேவியர் பள்ளி, புனித ஜான் பள்ளி, ஹோலி கிராஸ் பள்ளி, கோடை கிரிகினி பள்ளி, ஆர்.சி.பள்ளி ஆகிய பள்ளிகளைச் சேர்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு இயற்கையை எவ்வாறு பாதுகாக்க வேண்டும் என்பது குறித்த கட்டுரை மற்றும் போட்டிகள் நடைபெற்றன.
இதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.