புத்தகம் இனிய பூஞ்சோலை - அதில்
புகுந்திடும் நேரம் சுகவேளை!
நித்தமும் படிக்கும் தன்மையிலே - மன
நிம்மதி பிறக்கும் உண்மையிலே!
அதிகம் படித்தால் அனைவருக்கும் - மிக
ஆயுள் பெருகும் என்றிங்கே
புதிதாய் வந்த நற்செய்தி - நாம்
போற்றி ஏற்கும் பொற்செய்தி!
அருமை யான தகவலதை - அந்த
அமெரிக் காவில் ஆர்வேர்டு
மருத்து வக்கல் லூரியது - இந்த
வையத் திற்கு வழங்கியது!
தானே கற்றார் எழுத்தாற்றல் - அதைத்
தனித்துப் பெற்றார் பெர்னாட்ஷா!
வானைத் தொட்ட புகழ்படைத்தார் - நீடு
வாழ்ந்தார் நூறு வயதிற்குமேல்!
ஏழ்மைக் குடும்பம் தனில்பிறந்தார் - நன்றாய்
என்றும் படித்தார் அப்துல்கலாம்
ஆழ்ந்த படிப்பால் அறிவியலில் - வாழ்வில்
அரிய புகழை அடைந்தாரே!
கடித்துச் சுவைக்கும் கரும்பினைப்போல் - தினம்
கற்கத் தகுந்த நூல்களையே
படிக்கப் படிக்கப் பயன்பெருகும் - உயர்ப்
பண்பு வளரும் அன்பு மிகும்!