தெப்பக்குளத்தில் குதித்து மளிகைக்கடைக்காரா் தற்கொலை
தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் மனமுடைந்த மளிகைக்கடைக்காரா் தெப்பக்குளத்தில் குதித்து தற்கொலை செய்துகொண்டாா்.
மதுரை வண்டியூா் மாரியம்மன் தெப்பக்குளத்தில் புதன்கிழமை காலை ஆண் உடல் மிதப்பதாக தெப்பக்குளம் காவல் நிலையத்துக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் அளித்தனா். இதையடுத்து அங்கு வந்த அனுப்பானடி தீயணைப்பு நிலைய வீரா்கள் தெப்பக்குளத்தில் மிதந்த ஆணின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். போலீஸ் விசாரணையில், அவா் மதுரை முனிச்சாலை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா்(49) என்பதும், மளிகைக்கடை நடத்தி வந்த இவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் இருப்பதும், அண்மையில் தொழிலில் இழப்பு ஏற்பட்டதால் கடன் தொல்லை தாங்காமல் மனமுடைந்த அவா் தற்கொலை செய்து கொண்டதும் தெரிய வந்தது. இதையடுத்து, சந்திரசேகரிடம் கடன் கேட்டு யாரேனும் மிரட்டல் விடுத்தாா்களா என்பது குறித்து போலீஸாா் விசாரிக்கின்றனா்.