பாடியூரில் அகழாய்வு நடத்த வலியுறுத்தல்
By DIN | Published On : 29th October 2017 01:15 AM | Last Updated : 29th October 2017 01:15 AM | அ+அ அ- |

சுமார் 2,500 ஆண்டுகள் பழமையான தொல்லியல் எச்சங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள பாடியூரில் அகழாய்வு பணிகளை தொடங்க வேண்டும் என தொல்லியல் ஆய்வாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திண்டுக்கல் அடுத்துள்ள பாடியூரில், மண் மூடிப்போன சுமார் 30 அடி உயரமுள்ள கோட்டை உள்ளது. இந்த கோட்டை அமைந்துள்ள பகுதியில் பழனியாண்டவர் கலைக்கல்லூரி பண்பாட்டுத் துறை பேராசிரியர்கள் ஆர்.மனோகரன், கே.அசோகன் மற்றும் தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது கிடைத்த பழமையான தொல்லியல் எச்சங்களின் அடிப்படையில், இந்த பகுதியில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொள்ள வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்து அவர்கள் மேலும் கூறியதாவது:
பாடியூர் பகுதியில் உள்ள கோட்டை மேடு, 200 ஆண்டுகளுக்கு முன் நரிமேடு என அழைக்கப்பட்டுள்ளது. கோட்டை மேட்டில் மேற்கொள்ளப்பட்ட முதல்கட்ட பரப்பாய்வில், சங்க கால மக்கள் பயன்படுத்திய மண்பாண்டங்கள், மண்ணால் உருவாக்கப்பட்ட சமையல் மற்றும் உணவுப் பாத்திரங்கள், சுடுமண் பொம்மைகள், திருகுகல், அகல் விளக்கு உள்ளிட்ட பொருள்கள் கண்டறியப்பட்டுள்ளன.
அதேபோல் முதுமக்கள் தாழிகள், கருப்பு சிவப்பு பானை ஓடுகள், ஈமடச் சடங்குகளுக்கான மண் பாண்டங்களின் எச்சங்களும் கிடைத்துள்ளன. படை வீரர்கள் முகாமிட்டுள்ள இந்த பகுதியில் பழங்காலத்தில் கடும் போர்கள் நடைபெற்றிருக்கலாம்.
இந்த பகுதியில் அகழ்வாய்வு பணிகள் மேற்கொண்டால், மேலும் பல வியப்பான தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவித்தனர்.
அப்போது ஆய்வு மாணவர்கள் வீரகருப்பையா, சேரல் பொழிலன் ஆகியோரும் உடனிருந்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...