வத்தலக்குண்டு அருகே வாழைப்பழம் சூறை விடும் விழா

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விவசாயம் செழிக்கவும், வேண்டுதல் நிறைவேறவும் வேண்டி வாழைப்பழம் சூறை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு அருகே விவசாயம் செழிக்கவும், வேண்டுதல் நிறைவேறவும் வேண்டி வாழைப்பழம் சூறை விடும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
     வத்தலக்குண்டு அருகேயுள்ள சேவுகம்பட்டியில் சுமார் நூறு ஆண்டுகள் பழமையான சோலைமலை அழகர் பெருமாள் கோயில் உள்ளது.  இக்கோயிலுக்கு வரும் பக்தர்களும், இந்த ஊரைச் சேர்ந்தவர்களும் தங்கள் நிலங்களில் விவசாயம் செழிக்கவும், தாங்கள் வேண்டும் காரியம் நிறைவேறவும் வேண்டி வாழைப்பழம் சூறைவிடுவதாக வேண்டிக் கொள்கின்றனர்.  
இதற்காக வருடம்தோறும் தைமாதம் மூன்றாம் தேதி வாழைப்பழம் சூறை விடும் திருவிழா நடைபெறுகிறது.  இதன்படி செவ்வாய்க்கிழமை மாலை வாழைப்பழம் சூறைவிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.  பெருமாளிடம் பல்வேறு கோரிக்கைகளை வேண்டிக் கொண்டு வீடுகளில் வைத்து நேர்ச்சை செய்து வழிபட்ட வாழைப்பழங்களை ஆண்கள் மட்டும் ஊர் எல்லையில் உள்ள எல்லை தெய்வமான ரெங்கம்மாள் கோயிலில் இருந்து தாம்பாளத்தில் வைத்தும், கூடைகளில் சுமந்தும் சோலைமலை அழகர்பெருமாள் கோயிலுக்கு எடுத்து வந்தனர். மேளதாளம் முழங்க கிராமத்தின் முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக பழங்கள் கொண்டு செல்லப்பட்டு பெருமாள் கோவிலுக்கு வந்து, அங்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு கோயிலின் மேற்புரத்திற்கு கொண்டு வந்து சூறைவிடப்பட்டது. கீழே விழும் வாழைப்பழங்களை பெருமாளின் பிரசாதமாக எண்ணி அனைவரும் வீடுகளுக்கு எடுத்துச் சென்றனர். இத்திருவிழாவிற்காக வெளியூரில் வசிக்கும் இந்த ஊரைச் சேர்ந்தவர்களும், பல்வேறு ஊரை சேர்ந்த பக்தர்களும் தவறாமல் பங்கேற்கின்றனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர்பொதுமக்கள் இணைந்து செய்திருந்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com