பழனி அருகே வெள்ளிக்கிழமை ஒரே இரவில் வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.
பழனி அடிவாரம் மருத்துவ நகரை சேர்ந்தவர் சங்கர்(30). இவர் பழனியை அடுத்த அமரபூண்டியில் தனது தாய், தந்தையுடன் வசித்து வருகிறார். இவர் மீது பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. தற்போது ஜாமீனில் உள்ள இவரை வெள்ளிக்கிழமை இரவு, அமரப்பூண்டியில் மின்தடை ஏற்பட்ட போது அங்கு காரில் வந்த சிலர் சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்து விட்டு தப்பினர்.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த டிஎஸ்பி., விவேகானந்தன் மற்றும் போலீஸார் சடலத்தை மீட்டு, பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனைத்தொடர்ந்து போலீஸார் நடத்திய விசாரணையில், கடந்த 2014-ஆம் ஆண்டு பாலசமுத்திரம் சாலையில் டாஸ்மாக் கடை அருகே நடைபெற்ற கொலையில் சங்கர் கைதான நிலையில், இவரை முன்விரோதம் காரணமாக கொலை செய்திருக்கலாம் என தெரியவந்துள்ளது.
இதுதொடர்பாக அதே ஊரைச் சேர்ந்த 3 பேரிடம் போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.
மற்றொரு கொலை: ஆயக்குடியை சேர்ந்தவர் சுல்தான். இவருக்கு மூன்று மனைவிகள் உள்ளனர். இவரது 3 ஆவது மனைவி மகன் தாஜூதீன் (40). இவர் உணவகம் நடத்தி வருகிறார்.
சுல்தானின் முதல் மனைவியின் மகன்கள் கம்ருதீன்(45), ஜாகீர்உசேன்(38), ஜாபர் அலி. இந்நிலையில் ஜாபர் அலி சகோதரர்கள் கம்ரூதீன் மற்றும் ஜாகீர்உசேனிடம் சொத்துகளைப் பிரித்து தருமாறு கேட்டு வந்துள்ளார்.
3 ஆவது மனைவியின் மகன் தாஜூதீன் தூண்டுதலினால் ஜாபர் அலி தகராறு செய்வதாக கருதினர். இதனால் வெள்ளிக்கிழமை இரவு கம்ரூதீன் மற்றும் ஜாகீர் உசேன் இருவரும் சேர்ந்து தாஜூதீனிடம் தகராறு செய்துள்ளனர்.
அப்போது இருவரும் கத்தியால் குத்தியதில் தாஜூதீன் உயிரிழந்தார். இதில் இருவரும் தப்பி ஓடினர். இரண்டு கொலை வழக்குகளையும் ஆயக்குடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.