திமுக ஆட்சிக்கு வந்தால் அராஜகம் அதிகரித்துவிடும் என, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் பேசினார்.
கம்பத்தில் செவ்வாய்க்கிழமை, தேனி மக்களவைத் தொகுதி அதிமுக வேட்பாளர் ரவீந்திரநாத்குமாருக்கு ஆதரவாக, அவர் பிரசாரம் செய்து பேசியதாவது: திமுக-காங்கிரஸ் கூட்டணி 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்தும், மக்களுக்கு நல்ல திட்டங்களை செயல்படுத்தவில்லை. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள 60 லட்சம் மக்களுக்கு ரூ. 2000 கொடுக்க முன்வருவதற்குள் திமுகவினர் நீதிமன்றம் சென்று அத்திட்டத்தை நிறுத்திவிட்டனர். எனவே, தேர்தல் முடிந்தவுடன், இத்தடையை விலக்கி அனைவருக்கும் ரூ.2 ஆயிரம் வழங்கப்படும்.
எதிர்க் கட்சியாக இருக்கும்போதே திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், ஆளுங்கட்சியாக வந்தால் தமிழகத்தை என்ன பாடு படுத்துவார்கள் என்பதை எண்ணிப் பார்க்கவேண்டும் என்றார்.