இரண்டு விபத்துகளில் மாணவர் உள்பட இருவர் சாவு
By DIN | Published On : 12th February 2019 07:17 AM | Last Updated : 12th February 2019 07:17 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் திங்கள்கிழமை இரு சக்கர வாகனத்தின் மீது தனியார் பேருந்து மோதியதில், பள்ளி மாணவர் உயிரிழந்தார்.
திண்டுக்கல் அடுத்துள்ள காப்பிளியப்பட்டியைச் சேர்ந்தவர் ரோஷன் (15). அதே பகுதியைச் சேர்ந்த நவீன்(14). இவர்கள் இருவரும், திண்டுக்கல்லில் உள்ள பள்ளியில் முறையே 10 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் படித்து வந்தனர்.
இந்நிலையில், திண்டுக்கல் எம்விஎம் அரசு மகளிர் கலைக் கல்லூரி அருகிலுள்ள ரயில்வே மேம்பாலத்தில் இரு சக்கர வாகனத்தில் திங்கள்கிழமை சென்றுள்ளனர். அப்போது, எதிரே வந்த தனியார் பேருந்து மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ரோஷன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பலத்த காயமடைந்த நவீன், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து தாடிக்கொம்பு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
அம்பாத்துரை அருகே மற்றொரு விபத்து: திண்டுக்கல் அடுத்துள்ள செட்டிநாயக்கன்பட்டி ரோஜா நகரைச் சேர்ந்தவர் விஷ்ணு சங்கர் (27). இவர், இரு சக்கர வாகனத்தில் கொடைரோடு நோக்கி திண்டுக்கல்-மதுரை நான்கு வழிச் சாலையில் சென்றுள்ளார். அப்போது, அம்பாத்துரை அடுத்துள்ள முருகம்பட்டி பிரிவு அருகே லாரி மோதியது. இதில், விஷ்ணு சங்கர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து அம்பாத்துரை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.