பழனி, ஒட்டன்சத்திரத்தில் இந்து அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 04th January 2019 01:16 AM | Last Updated : 04th January 2019 01:16 AM | அ+அ அ- |

சபரிமலையில் தரிசனம் செய்ய பெண்களை அனுமதித்த கேரள அரசை கண்டித்து பழனி, ஒட்டன்சத்திரத்தில் இந்து அமைப்பினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழனி பேருந்து நிலையம் ரவுண்டானா அருகே இந்து முன்னணி சார்பில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பாலன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் அருண், மாவட்ட பொதுச்செயலாளர் ஜெகன் உள்ளிட்டோர் சிறப்புரை நிகழ்த்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பழனி பேருந்து நிலையம் அருகே மாலையில் பாரதிய ஜனதா சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். நகரத் தலைவர் செந்தில்குமார் வரவேற்றார். மாவட்ட துணைத் தலைவர் தண்டபாணி, விஷ்வஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் கனகராஜ், மாநில விவசாய அணி செயற்குழு உறுப்பினர் திருமலைசாமி ஆகியோர் பேசினர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில் கேரள முதல்வர் பினராயி விஜயன் உருவப்படத்தை எரிக்க முயன்றனர். இதையடுத்து பாதுகாப்புக்கு நின்றிருந்த போலீஸார் இதைத் தடுத்தனர்.
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் பேருந்து நிலையம் முன்பாக இந்து முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு திண்டுக்கல் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் ரகுபதி தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் மாரிமுத்து, மாவட்ட செயலாளர் பாலு, ஒன்றியத் தலைவர் செந்தில் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் இந்து முன்னணியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.ஒன்றியச் செயலாளர் பிரபு நன்றி கூறினார்.