எரியோடு பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், எரியோடு பகுதியைச் சேர்ந்தவர் பாஸ்கரன். இவரது மகன் மணிகண்டன்(19). அதே பகுதியிலுள்ள தனியார் பெட்ரோல் பங்கில் பணிபுரிந்து வந்தார். இந்நிலையில், வியாழக்கிழமை காலை பணியிலிருந்த அவர், எரியோடு நால்ரோடு பகுதியிலுள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது, வேடசந்தூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மோதியதில் பலத்த காயமடைந்த மணிகண்டன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்து குறித்து எரியோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.