ஒட்டன்சத்திரத்தில் உலக புகையிலை தின விழிப்புணர்வு பேரணி புதன்கிழமை நடைபெற்றது.
ஒட்டன்சத்திரம் சி.எப்.மருத்துவமனையில் தொடங்கிய பேரணியை அதன் கண்காணிப்பாளர் ஜார்ஜ் பிலிப் தொடக்கி வைத்தார். இந்த பேரணி ஒட்டன்சத்திரம் பேருந்து நிலையம், பழனி சாலை வழியாகச் சென்று கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளியில் முடிவடைந்தது. அதனைத் தொடர்ந்து அங்கு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. அதில் பல் மருத்துவர் ஆனந்தன், பள்ளிதலைமை ஆசிரியர் வடிவேல் ஆகியோர் பள்ளி மாணவர்களிடம் புகையிலையினால் ஏற்படும் தீமைகள் குறித்து விளக்கிப் பேசினர்.
இந்த பேரணியில் சி.எப்.மருத்துவமனையின் செவிலியர்கள், கிறித்துவ மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கே.ஆர்.அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.