காஞ்சிபுரம் மாவட்டத்தில் பன்னாட்டு நிறுவனம் ஒன்றில் தொழிற்சங்கம் அமைத்ததற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 150 பேருக்கு மீண்டும் வேலை வழங்கக்கோரி திண்டுக்கல்லில் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் இந்திய தொழிற்சங்க மையத்தின் திண்டுக்கல் மாவட்டக் குழு சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு (சிஐடியு) மாவட்டத் துணைத் தலைவர் பால்ராஜ் தலைமை வகித்தார்.
மாவட்ட துணைச் செயலர் கே.பிரபாகரன் முன்னிலை வகித்தார். மாவட்டச் செயலர் கே.ஆர்.கணேசன் சிறப்புரை நிகழத்தினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பன்னாட்டு நிறுவனங்களில் தொழிற்சங்க உரிமை மறுக்கப்படுவதைக் கண்டித்தும், சிஐடியு சங்கம் அமைத்த காரணத்திற்காக பணி நீக்கம் செய்யப்பட்ட 150-க்கும் மேற்பட்ட சங்க நிர்வாகிகளுக்கு மீண்டும் வேலை வழங்க கோரியும் கோஷமிட்டனர்.
இந்திய தொழிலாளர் நலச் சட்டங்களை அமல்படுத்தாத பன்னாட்டு நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தினர்.