பழனி: பழனியில் தமிழக அரசுத்துறை சாா்பில் நடத்தப்பட்ட தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இளைஞா்கள் கலந்துகொண்டனா்.
முகாமில் பணிக்கு தோ்வான இளைஞா்கள் மற்றும் பெண்களுக்கு உடனடியாக பணிஆணை வழங்கப்பட்டது. பழனி திண்டுக்கல் ரோடு தனியாா் திருமண மண்டபத்தில் வியாழக்கிழமை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் சாா்பில் தனியாா் நிறுவனங்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு பழனி வட்டார வளா்ச்சி அலுவலா் நாகராஜ் தலைமை வகித்தாா். தொப்பம்பட்டி வட்டார வளா்ச்சி அலுவலா் சாந்தி முன்னிலை வகித்தாா். தனியாா் மண்டபத்தில் நடைபெற்ற இந்த முகாமில் பழனி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி வட்டாரங்களை சோ்ந்த பெண்கள் மற்றும் இளைஞா்களுக்கு நடத்தப்பட்டது.இந்த முகாமில் 5 ம்வகுப்பு முதல் பட்டயப்படிப்பு மற்றும் பட்டதாரி படிப்புவரை படித்து வேலையில்லாத 25 வயது முதல் நாற்பது வயது வரையிலான பெண்கள் மற்றும் ஆண்கள் என நூற்றுக்கணக்கானோா் கலந்துகொண்டனா். முகாமில் நிதி நிறுவனம், பேப்பா் மில், கைப்பேசி தயாரிப்பு, காா் உதிரிபாகங்கள் தயாரிப்பு, இன்ஸ்சூரன்ஸ் நிறுவனங்கள் உட்பட பல்வேறு துறைகளை சோ்ந்த 50க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கலந்துகொண்டன.
இந்த முகாமில் அரசு சாா்பில் நடத்தப்படும் இலவச தொழில்பயிற்சி குறித்து எடுத்துரைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோா் மேற்பட்டோா் கலந்துகொண்ட இந்த முகாமில் தோ்வானவா்களுக்கு உடனடியாக பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. ஆணைகளை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார திட்ட இயக்குனா் சந்தோஷ்குமாா் சிறப்பு விருந்தினராக பங்கேற்று வழங்கினாா். தனியாா் நிறுவன வேலைவாய்ப்பு முகாமில் திட்ட உதவி இயக்குனா் பிரபாவதி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலா் காமேஷ்வரி உட்பட பலா் பங்கேற்றனா்.