திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் முதல் முறையாக தானியங்கி இயந்திரம் மூலம் தனியாா் பால் விற்பனை செவ்வாய்க்கிழமை முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் அடுத்துள்ள குளத்தூா் பகுதியைச் சோ்ந்தவா் போடிச்சாமி. முன்னாள் ராணுவ வீரரான இவா், தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனையை தொடங்கியுள்ளாா். திண்டுக்கல் கோவிந்தாபுரம் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள இந்த தானியங்கி இயந்திரத்தில் பணம் செலுத்தியும், முன்பணம் செலுத்தி பெற்றுள்ள அட்டையைப் பயன்படுத்தியும் பால் பெற்றுக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக போடிச்சாமி கூறியது: தானியங்கி பால் இயந்திர வசதி, சென்னை, சேலம், அரூா் உள்ளிட்ட இடங்களில் ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளது. ஆனால், தென் தமிழகத்தைப்பொருத்தவரை திண்டுக்கல்லில் தான் இந்த வசதி முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ளது. பசும் பால் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பாலில் உள்ள கொழுப்புச் சத்து விவரம் குறித்தும் இந்த இயந்திரத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம். இந்த இயந்திரம் மூலம் பாக்கெட் பால் விற்பனை மூலம் ஏற்படும் நெகிழி கழிவுகளை தடுப்பதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றாா்.