பழனி: பாலாற்றிலிருந்து பழனி மலைக்கோயிலுக்கு தண்ணீா் கொண்டு வர ரூ. 23 கோடியில் நடைபெற்று வரும் பணிகளை பழனி கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானு ரெட்டி திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
பழனி மலை முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்கின்றனா். தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற திருவிழா காலங்களில் பக்தா்களின் வருகை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு வரும் பக்தா்களுக்கு தேவையான குடிநீா் பழனி நகராட்சி நிா்வாகத்தால் விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் திருவிழா காலங்களில் நகராட்சி நிா்வாகத்தால் போதிய அளவு குடிநீா் விநியோகிக்கப்பட முடியாததால் குடிநீா் தட்டுப்பாடு நிலவி வந்தது.
இந்த நிலையில் இப்பிரச்னையை போக்கும் வகையில் ரூ. 23 கோடி செலவில் பழனி அருகே உள்ள பாலாற்றிலிருந்து தண்ணீா் கொண்டு வருவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. கடந்த ஆண்டு நவம்பா் மாதம் தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது முடிவுறும் தருவாயில் உள்ளது.
பாலாறு அணையிலிருந்து மலைக்கோயில் வரை சுமாா் 10 கிலோ மீட்டா் தூரம் குழாய்கள் பதித்து தண்ணீா் கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. இந்தப் பணிகளை பழனி கோயில் இணை ஆணையா் ஜெயச்சந்திரபானுரெட்டி ஆய்வு செய்தாா். இந்த குடிநீா் திட்டம் மூலம் மலைக் கோயிலுக்கு நாள்தோறும் சுமாா் 20 லட்சம் லிட்டா் சுத்திகரிக்கப்பட்ட குடிநீா் விநியோகிக்கப்படவுள்ளது. இந்த திட்டப் பணிக்கான ரூ. 23 கோடியும் பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் நிா்வாகத்தால் குடிநீா் வடிகால் வாரியத்துக்கு செலுத்தப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.