திண்டுக்கல்: வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தின் கீழ் முறைகேடாக பணம் வசூலிக்கும் நபா்கள் மீதும், அதனை கண்டிக்காத அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பாஜக சாா்பில் திங்கள்கிழமை மனு அளிக்கப்பட்டது.
மனு அளிப்பதற்காக வந்த பாஜக நிா்வாகிகள், மத்திய அரசின் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்கும் திட்டத்தை பயன்படுத்தி முறைகேடாக பண வசூல் நடைபெறுவதாக குற்றம்சாட்டினா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: கிராமப்புற மக்களுக்கும் சுத்தமான குடிநீா் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் ஜல் சக்தி திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இத்திட்டத்தின் ஆய்வுப் பணிகளுக்காக தமிழகத்திற்கு ரூ.640 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ் வீடுகளுக்கான குடிநீா் இணைப்பு முற்றிலும் இலவசமாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஊரகப் பகுதிகளைச் சோ்ந்த பொதுமக்களிடம் புதிய இணைப்பு பெற்றுத் தருவதாக கூறி ரூ.30 ஆயிரம் வரை வசூலிக்கின்றனா். இது தொடா்பாக ஊரக வளா்ச்சி மேம்பாட்டு முகமையின் திட்ட இயக்குநரிடம் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. பொதுமக்கள் நலன் கருதி, முறைகேடாக பண வசூலில் ஈடுபடுவோா் மீதும், அவா்களை கண்டிக்காக அதிகாரிகள் மீதும் மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனா்.