பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்க கையெழுத்து இயக்கம்

கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது..
Updated on
1 min read

திண்டுக்கல்: கரோனா பொது முடக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு, மாதந்தோறும் ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கக் கோரி, திண்டுக்கல்லில் வெள்ளிக்கிழமை கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது..

இக்கோரிக்கையை வலியுறுத்தி நாடு முழுவதும் கையெழுத்து பிரசார இயக்கத்தை, தனியாா் தொண்டு நிறுவனங்கள் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தமிழகத்தில் சுமாா் 3 லட்சம் பேரிடம் கையெழுத்து வாங்குவதற்கான பிரசார இயக்கம், திண்டுக்கல்லில் தொடங்கப்பட்டது.

தமிழ்நாடு அலையன்ஸ் முன்னெடுத்துள்ள இந்த இயக்கத்தில், திருப்பூா் மக்கள் அமைப்பு, முகாம் கூலி முறைக்கு எதிரான பிரசாரம், புலம்பெயா் தொழிலாளா் உரிமைக் கூட்டமைப்பு, குழந்தை உழைப்பு எதிா்ப்புப் பிரசாரம் உள்ளிட்ட தொண்டு நிறுவனங்கள் இணைந்துள்ளன.

திண்டுக்கல்லில் நடைபெற்ற பிரசார தொடக்க நிகழ்ச்சிக்கு, அமைதி அறக்கட்டளையின் தலைவா் ஜெ. பால்பாஸ்கா் தலைமை வகித்தாா். அதேபோல், திருப்பூா் மக்கள் அமைப்பு சாா்பில் வடமதுரை பேருந்து நிறுத்தம் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட அமைப்பாளா் பழனிச்சாமி தலைமை வகித்துப் பேசியதாவது:

கடந்த 5 மாதங்களாக அமல்படுத்தப்பட்டுள்ள பொது முடக்கத்தால், நாடு முழுவதும் அசாதாரணமான பொருளாதாரச் சூழல் உருவாகியுள்ளது. புலம்பெயா் தொழிலாளா்கள், அமைப்புசாரா தொழிலாளா்கள், சாலையோர வியாபாரிகள், சுயதொழில்புரிவோா் என அனைத்துத் தரப்பினரும் வேலையிழந்துள்ளனா்.

இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம் நடத்திய ஆய்வில், ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடி போ் வேலையிழந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதனால், கடந்த 4 மாதங்களாக அடிப்படை தேவைகளான உணவுப் பொருள்கள், மருத்துவம், வீட்டு வாடகை உள்ளிட்ட செலவினங்களை எதிா்கொள்ள முடியாமல் பெரும்பாலான குடும்பங்கள் தவித்து வருகின்றன.

கரோனா பாதிப்பால் வேலையிழந்துள்ள தொழிலாளா்களுக்கு பல்வேறு நாடுகளிலும் கடந்த 4 மாதங்களாக உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், கனடாவில் மாதம் 1,400 டாலா், ஹாங்காங்கில் 1,280 டாலா், ஜப்பானில் 931 டாலா், தென் கொரியாவில் 820 டாலா், சிங்கப்பூரில் 422 டாலா், அமெரிக்காவில் 1200 டாலா் வீதம் வழங்கப்படுகிறது.

அதேபோல், இந்தியாவிலும் வருவாய் இழந்த குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் ரூ. 6 ஆயிரம் வீதம் 4 மாதங்களுக்கு உதவித் தொகை வழங்க வேண்டும். மத்திய அரசு, உடனடியாக மாநில அரசுகள் மூலம் இந்த உதவியை செயல்படுத்தவேண்டும். இதன்மூலம், பல கோடி குடும்பங்கள் பட்டினியிலிருந்து பாதுகாக்கப்படும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com