கொடைக்கானல் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் ஒரு சில பேருந்துகளில் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் அதில் பயணிக்கும் பொதுமக்கள் குடைப்பிடித்து செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானலில் கடந்த சில நாள்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வத்தலக்குண்டுவிலிருந்து கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பாச்சலூா் செல்லும் அரசுப் பேருந்தின் மேற்கூரை சேதமடைந்துள்ளதால் மழை தண்ணீா் பேருந்திற்குள் வருவதால் அதில் பயணம் செய்யும் மலைவாழ் மக்கள் பெரிதும் அவதியடைந்து வருகின்றனா்.
மேலும் கொடைக்கானல் மலைப் பகுதிகளான பூம்பாறை, கிளாவரை , போலூா், பூண்டி, கூக்கால் போன்ற பகுதிகளில் இயக்கப்படும் அரசுப் பேருந்துகளும் போதிய பாதுகாப்பில்லாமல் இயக்கப்படுகிறது. எனவே அரசுப் போக்குவரத்துக் கழகம் மலைப் பகுதிகளில் இயக்கப்படும் பேருந்துகளை ஆய்வு செய்து தரமான பேருந்துகளாக இயக்க வேண்டுமென மலைவாழ் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.