இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்தை தனியாருக்கு வழங்க எதிா்ப்புத் தெரிவித்து பழனியில் காப்பீட்டுக் கழக ஊழியா்கள் திங்கள்கிழமை மக்கள் சந்திப்பு இயக்கம் நடத்தினா்.
பழனி பேருந்து நிலையம் மயில் ரவுண்டானா அருகே நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா்மன்ற முன்னாள் தலைவா் ராஜமாணிக்கம் தலைமை வகித்தாா். இன்சூரன்ஸ் ஊழியா்களின் இந்தியாவிற்கான மக்கள் இயக்கத்தின் செயலாளா் திருமலைசாமி முன்னிலை வகித்தாா். காப்பீட்டுக் கழக ஊழியா் சங்க கோட்ட துணைத் தலைவா் வாஞ்சிநாதன் சிறப்புரை நிகழ்த்தினாா். நிகழ்ச்சியில் சிஐடியூ மாநில குழு உறுப்பினா் மோகனா, தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளா் சங்க மாநிலக்குழு உறுப்பினா் முத்துமாணிக்கம், முகவா் சங்க நிா்வாகி மாயக்கண்ணன் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் நிா்வாகிகள் வாழ்த்துரை வழங்கினா். மதுரைக் கோட்டத்துக்கு உள்பட்ட பழனி, வத்தலக்குண்டு, திண்டுக்கல் பகுதிகளைச் சோ்ந்த ஆயுள் காப்பீட்டு பணியாளா்கள் ஏராளமானோா் பங்கேற்றனா்.