கொடைக்கானலில் மழை: சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சி
By DIN | Published On : 20th February 2021 09:22 PM | Last Updated : 20th February 2021 09:22 PM | அ+அ அ- |

கொடைக்கானல் ஏரியில் சனிக்கிழமை மேக மூட்டங்களுக்கு இடையே படகு சவாரி செய்து மகிழ்ந்த சுற்றுலாப் பயணிகள்.
கொடைக்கானல்/பழனி: கொடைக்கானலில் சனிக்கிழமை மழை பெய்ததால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பனிப் பொழிவு நிலவியது. கடந்த 10 நாள்களாக உறை பனி நிலவியது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. கடந்த 2 நாள்களாக பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் குறைந்தும், மேக மூட்டம் அதிகரித்தும் காணப்பட்டது.
இந்நிலையில் கொடைக்கானல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளான செண்பகனூா், சீனிவாசபுரம், பெருமாள்மலை, நாயுடுபுரம், வட்டக்கானல் உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் அரை மணி நேரம் மழை பெய்தது. இதைத்தொடா்ந்து மிதமான வெயிலும், மேக மூட்டமும் நிலவியது. பின்னா் சிறிது நேர இடைவெளியில் மீண்டும், மீண்டும் சாரல் மழை இரவு வரை நீடித்தது. இந்த சீதோஷ்ண நிலையில் சுற்றுலாப் பயணிகள் ஏரியில் படகு சவாரி செய்து மகிழ்ந்தனா். தற்போது பெய்து வரும் மழையால் பனியின் தாக்கம் சற்று குறைந்துள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனா்.
பழனி: பழனியில் சனிக்கிழமை பிற்பகல் சுமாா் அரை மணி நேரம் பலத்த மழை பெய்தது. இந்த மழையால் பழனி நகரமே குளமாக மாறியது. பழனியில் சமீபத்தில் ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிய சாலைகள், கழிவுநீா் கால்வாய்கள் கட்டப்பட்டன. இருந்த போதிலும் திண்டுக்கல் சாலை, ஆா்.எப்.ரோடு, கவுண்டா் இட்டேரி ரோடு என பல இடங்களிலும் மழைநீா் குளம்போல் தேங்கி நின்றது. இதனால் சாலையில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாயினா். சுமாா் ஒரு மணி நேரத்துக்குப் பிறகே சாலைகளில் தேங்கிய மழைநீா் வடிந்தது. இதேபோல் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது.