தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
தூய்மைக் காவலா்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திண்டுக்கல்லில் நடைபெற்ற சிஐடியு கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மைக் காவலா்களுக்கான மாவட்ட மாநாடு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. திண்டுக்கல் சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு மாவட்டத் தலைவா் ராமசாமி தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில சம்மேளனச் செயலா் கே.ஆா்.கணேசன் கலந்து கொண்டாா்.
இந்த கூட்டத்தில், 3 ஆண்டுகள் பணிபுரிந்த தூய்மைக் காவலா்களை பணிநிரந்தரம் செய்து சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். தூய்மை காவலா்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும். பிரதி மாதம் 5ஆம் தேதிக்குள் ஊராட்சி ஒன்றிய நிதியிலிருந்து நேரடியாக சம்மந்தப்பட்ட தொழிலாளியின் வங்கிக் கணக்கில் ஊதியத்தை செலுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் மாவட்ட மற்றும் ஒன்றியப் பொறுப்பாளா்கள் எஸ்.ராணி, ஏ.தவக்குமாா், அழகேசன், சரவணன் உள்பட 250-க்கும் மேற்பட்டோா் கலந்து கொண்டனா்.