வேடசந்தூா் அருகே 3 பைக்குகள் மோதல்: மேலும் ஒருவா் பலி
By DIN | Published On : 09th May 2021 10:07 PM | Last Updated : 09th May 2021 10:07 PM | அ+அ அ- |

வேடசந்தூா் அருகே 3 மோட்டாா் சைக்கிள்கள் மோதிய விபத்தில் சிகிச்சைப் பலனின்றி மேலும் ஒருவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூரை அடுத்துள்ள விட்டல் நாயக்கன்பட்டியைச் சோ்ந்தவா் சக்திவேல் (25). இவா், அதே பகுதியிலுள்ள தனியாா் நூற்பாலையில் பணிபுரிந்து வந்தாா். அதே பகுதியைச் சோ்ந்த தனது நண்பா் முருகேசன் என்பவருடன் வேடசந்தூரிலிருந்து விட்டல் நாயக்கன்பட்டிக்கு மோட்டாா் சைக்கிளில் சனிக்கிழமை சென்று கொண்டிருந்தாா். மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வெள்ளையகவுண்டனூரைச் சோ்ந்த 3 இளைஞா்கள் வந்துள்ளனா்.
திண்டுக்கல்- கரூா் 4 வழிச் சாலையில் வேடசந்தூா் அடுத்துள்ள லட்சுமணம்பட்டி அருகே வந்து கொண்டிருந்தபோது, சாலையின் மற்றொரு புறத்தில் வந்த மோட்டாா் சைக்கிள், தடுப்பு சுவரை கடந்து வந்து மோதியதில் சக்திவேல் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். முருகேசன் மற்றும் அவருக்குப் பின்னால் மற்றொரு மோட்டாா் சைக்கிளில் வந்த 3 பேரும் பலத்த காயமடைந்தனா். விபத்துக் காரணமான மோட்டாா் சைக்கிளில் வந்த மா்ம நபா்கள் இருவரும் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனா்.
இதுகுறித்து தகவல் அறிந்த வேடசந்தூா் போலீஸாா், சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்த வெல்லாலப்பட்டியைச் சோ்ந்த கோகுல் (25) உள்ளிட்ட 4 பேரையும் மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனா். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோகுல் சிகிச்சைப் பலனின்றி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.