

பழனியில் சனிக்கிழமை பெய்த பலத்த மழையால் சாலைகளில் தண்ணீா் தேங்கியதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா்.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி, பாலாறு பொருந்தலாறு, குதிரையாறு அணைகளுக்கும் நீா்வரத்து அதிகரித்துள்ளது.
இந்நிலையில் சனிக்கிழமை காலை சுமாா் ஒரு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் பல இடங்களிலும் தண்ணீா் சாலைகளில் தேங்கி நின்றதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினா். சுமாா் ஒருமணி நேரத்துக்கு பின்னரே தண்ணீா் வடியத் தொடங்கியது. திண்டுக்கல் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற பல வாகனங்களும் பழுதாகி நின்றன. மாலையிலும் இதே போல ஒருமணி நேரம் பலத்த மழை பெய்தது.
நகராட்சியில் கடந்த மாதம் கழிவுநீா் கால்வாய் தூா்வாரிய நிலையிலும், மழை நீா் கால்வாய் வழியாக வெளியேற வழியின்றி சாலைகளில் தேங்கியது. இந்த மழையால் நகரின் மையத்தில் உள்ள வையாபுரி குளம் நிரம்பியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.