முத்துக்குடா கடற்கரை அலையாத்திக் காடுகளை மாணவர்கள் படகுகளில் சென்று கண்டு ரசித்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார்கோவில் வட்டத்தில் உள்ளது முத்துக்குடா கடற்கரை கிராமம். சுமார் 15 ஏக்கர் பரப்பளவு கொண்ட அலையாத்திக்காடுகள் இங்குள்ளன.
சிறிய கடற்பயணத்துடன் அலையாத்திக்காடுகளைப் பார்வையிடவும் காட்டுக்குள் ஓய்விடம், உணவிடம் அமைத்து சுற்றுலாத்தலமாக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு திட்டமிட்டு, கடந்த வாரம் இப்பகுதியை நேரில் பார்வையிட்டு வந்தார்.
இதன் தொடர்ச்சியாக உலக சுற்றுலா தினத்தையொட்டி புதுக்கோட்டையைச் சேர்ந்த 50 மாணவர்களுடன் கடற்பயணத்தையும் மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்திருந்தது.
7 சிறிய ரக பைபர் படகுகள் மூலம் கடலுக்குள் சென்ற மாணவர்கள், அலையாத்திக் காடுகளைக் கண்டு ரசித்தனர். இதற்கான ஏற்பாடுகளை சுற்றுலாத்துறை, மீன்வளத்துறை ஆகியன செய்திருந்தன.