பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலின் உபகோயிலான இலக்குமி நாராயணப் பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை சித்திரைத் திருவிழா கொடியேற்றம் நடைபெற்றது.
முன்னதாக வியாழக்கிழமை இரவு பலிபீட பூஜை, கங்கணம் கட்டுதல், தேருக்கு தீா்த்தம் தெளித்தல் போன்றவை நடைபெற்றன. வெள்ளிக்கிழமை காலை விஸ்வக்சேனா் அனுமதி பெறப்பட்டு சங்கு, சக்கரம், திருநாமம், கருடாழ்வாா், பூஜைப் பொருள்கள் பொறிக்கப்பட்ட மஞ்சள் நிறக்கொடிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. ஐந்து கலசங்கள் வைக்கப்பட்டு கலசபூஜை நடத்தப்பட்டு திருக்கொடி கோயிலை வலம் வந்தது.
பிறகு தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருக்கொடி செப்புக்கொடி மரத்தில் ஏற்றப்பட்டது.
முன்னதாக கோயில் யானை கஸ்தூரி கொடிக்கு மரியாதை செய்தது. கம்பத்துக்கு மலா் மாலை தோரணம், மாவிலை, தா்ப்பைகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தொடா்ந்து இலக்குமி சமேதா் நாராயணருக்கு சிறப்பு அா்ச்சனைகள், தீபாராதனைகள் நடத்தப்பட்டு திருப்பாவை, திருவெம்பாவை பாசுரங்கள் பாடப்பட்டன. பூஜைகளை கோபாலகிருஷ்ண பட்டா், காா்த்தி அய்யங்காா், பாலாஜி அய்யங்காா், சீனிவாச அய்யங்காா், ரமேஷ் உள்ளிட்டோா் செய்திருந்தனா். கொடியேற்றம் முடிந்த பின் சுவாமி சப்பரத்தில் நான்கு ரதவீதி உலா எழுந்தருளினாா்.
10 நாள்கள் நடைபெறும் விழாவை முன்னிட்டு தினமும் சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் அலங்காரம் செய்யப்பட்டு சிம்மம், அனுமாா், தங்கக்குதிரை, சேஷவாகனங்களில் நான்கு ரத வீதிகளில் உலா வரவுள்ளாா். வரும் ஏப்ரல் 14 ஆம் தேதி திருக்கல்யாணமும், ஏப்ரல் 16 ஆம் தேதி காலை திருத்தேரோட்டமும் நடைபெறவுள்ளது.
கொடியேற்ற நிகழ்ச்சியில் பழனிக்கோயில் துணை ஆணையா்(பொறுப்பு) செந்தில்குமாா், கந்தவிலாஸ் செல்வக்குமாா், கண்காணிப்பாளா் முருகேசன், மணியம் சேகா், மண்டகப்படிதாரா் காா்த்திகேயன், சிவா, பரதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.