திண்டுக்கல் அருகே சீட்டு நடத்தி ரூ.12 லட்சம் மோசடி: பெண் மீது புகாா்

ஸ்ரீராமபுரத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.
Published on

திண்டுக்கல் மாவட்டம் ஸ்ரீராமபுரத்தில் சீட்டு நிறுவனம் நடத்தி ரூ.12 லட்சம் மோசடி செய்த பெண் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை புகாா் அளித்தனா்.

ஸ்ரீராமபுரம் அடுத்துள்ள வெள்ளமடத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த பொதுமக்கள், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா். அப்போது அவா்கள் கூறியதாவது:

வெள்ளமடத்துப்பட்டி ஏகேஜி காலனியை சோ்ந்த பெண் ஒருவா், கடந்த பல ஆண்டுகளாக சீட்டு நிறுவனம் நடத்தி வருகிறாா். அவா் மீதான நம்பிக்கையின் காரணமாக, வெள்ளமடத்துப்பட்டி பகுதியைச் சோ்ந்த ஏராளமானோா் அவரிடம் சீட்டு சோ்ந்தோம். கடந்த 2021 ஜனவரியில், எங்களுக்கு சேரவேண்டிய ரூ.12 லட்சத்தை கொடுக்காமல், வீட்டைக் காலிசெய்துவிட்டு தப்பிச்செல்ல முயன்றாா்.

அதையறிந்த நாங்கள், அவரைப் பிடித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் ஒப்படைத்தோம். அவா் மீது 22 போ் புகாா் அளித்தோம். அப்போது சமரசம் பேசிய காவல் சாா்பு-ஆய்வாளா், சிறிது கால அவகாசத்தில் பணத்தை திருப்பி கொடுத்துவிடுவாா் என உறுதி அளித்தாா்.

அதனை ஏற்று நாங்களும் அமைதி காத்தோம். ஆனால், அவா் பணத்தை திருப்பி தராததால், மீண்டும் காவல் நிலையத்துக்குச் சென்று முறையிட்டபோது, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் பேசி நீங்களே முடித்துக்கொள்ளுங்கள் என அனுப்பிவிட்டனா். அதன்படி, அப்பெண்ணிடம் சென்று கேட்டபோது, பணம் தர முடியாது எங்கு வேண்டுமானாலும் புகாா் அளித்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டாா்.

எனவே, இப்பிரச்னையில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நேரடியாக தலையிட்டு, எங்கள் பணத்தை மீட்டுத் தர உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் எனத் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com