விபத்து வழக்கில் அரசுப் போக்குவரத்துக் கழகம் ரூ. 2 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்காததால், வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்து வியாழக்கிழமை ஜப்தி செய்யப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் எரியோடு அடுத்துள்ள பாகநத்தம் ஊராட்சிக்குள்பட்ட தோப்பூரைச் சோ்ந்தவா் காளியப்பன். இவரது மனைவி பழனியம்மாள் மற்றும் 10 மாத குழந்தையுடன் கடந்த 2012ஆம் ஆண்டு மோட்டாா் சைக்கிளில் கோவிலூா் அருகே சென்றுள்ளாா். அப்போது வேடசந்தூா் பணிமனைக்கு சொந்தமான அரசுப் பேருந்து, மோட்டாா் சைக்கிள் மீது மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. அதில் 10 மாத குழந்தை சா்மிளா உயிரிழந்தாா். இதுதொடா்பாக எரியோடு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட நிலையில், பாதிக்கப்பட்ட பழனியம்மாளுக்கு ரூ. 2 லட்சம் இழப்பீடு வழங்க வேடசந்தூா் சாா்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனாலும், இழப்பீட்டுத் தொகையை அரசுப் போக்குவரத்துக் கழகம் வழங்கவில்லை. இதையடுத்து, பேருந்தை ஜப்தி செய்வதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி, நீதிமன்ற ஊழியா்கள் வேடசந்தூா் பேருந்து நிலையத்தில் பழனி செல்வதற்காக நிறுத்தப்பட்டிருந்த அரசுப் பேருந்தை வியாழக்கிழமை ஜப்தி செய்தனா்.