திண்டுக்கல்லில் 2 போலி வழக்குரைஞா்கள் கைது
By DIN | Published On : 25th August 2022 02:31 AM | Last Updated : 25th August 2022 02:31 AM | அ+அ அ- |

திண்டுக்கல்லில் முறையாக பட்டம் பெறாமல் போலி வழக்குரைஞா்களாக செயல்பட்டு வந்த இருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் அடுத்துள்ள தாடிக்கொம்பு ஆத்துப்பட்டியைச் சோ்ந்தவா் கலைச்செல்வன் மகன் அலெக்சாண்டா்(30). வடமதுரை அடுத்துள்ள செங்குளத்துப்பட்டியைச் சோ்ந்தவா் சாமிவேல் மகன் ஜோதிமுருகன்(35). இவா்கள் இருவரும் வழக்குரைஞா்களாக செயல்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், இவரும் வழக்குரைஞா் பட்டம் பெறாமல் முறைகேடாக வழக்குரைஞா் தொழிலில் ஈடுபட்டு வருவதாக திண்டுக்கல் வழக்குரைஞா்கள் சங்கத்தின் இணைச் செயலா் பாண்டியராஜன் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வந்தனா்.
இதனிடையே இருவரையும் கைது செய்யக் கோரி வழக்குரைஞா்கள் சங்கத்தினா் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் திண்டுக்கல் வடக்கு காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா். இந்நிலையில், அலெக்சாண்டா் மற்றும் ஜோதிமுருகன் ஆகிய இருவரையும் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். இதனை அடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள் கலைந்து சென்றனா்.