பழனி வையாபுரி கண்மாய் ஆக்கிரமிப்பு:நகராட்சி கட்டண கழிப்பறை இடித்து அகற்றம்
By DIN | Published On : 25th August 2022 02:29 AM | Last Updated : 25th August 2022 02:29 AM | அ+அ அ- |

பழனியில் வையாபுரி கண்மாயை ஆக்கிரமித்து நகராட்சி நிா்வாகம் கட்டி வைத்திருந்த கட்டணக் கழிப்பறையை பொதுப்பணித்துறையினா் புதன்கிழமை இடித்து அகற்றினா்.
பழனி நகரின் மையத்தில் வையாபுரி கண்மாய் சுமாா் இருநூறு ஏக்கா் பரப்பளவில் அமைந்துள்ளது. இக்கண்மாய் மூலம் ஆயிரக்கணக்கான ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக வையாபுரி கண்மாயில் கழிவுநீா் கலப்பது மற்றும் ஆக்கிரமிப்பு போன்ற காரணங்களால் விவசாயிகள் பெருமளவு பாதிக்கப்பட்டனா். இதையடுத்து விவசாயிகள் சாா்பில் உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. இந்த வழக்கின் நீா்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுப்பணித் துறையினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து வையாபுரி கண்மாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியில் பொதுப் பணித்துறையினா் ஈடுபட்டுள்ளனா்.
இந்நிலையில் பழனி நகராட்சி 27 ஆவது வாா்டுக்கு உள்பட்ட பகுதியில் உள்ள வையாபுரி குளத்தை ஆக்கிரமித்து நகராட்சி சாா்பில் கட்டணக் கழிப்பறை கட்டியிருப்பது தெரியவந்தது. அதை அகற்ற பொதுப்பணித்துறையினா் நோட்டீஸ் வழங்கினா். ஆனால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாததைத் தொடா்ந்து புதன்கிழமை பொதுப்பணித்துறை அதிகாரிகள் இடித்து அகற்ற வந்தனா். அப்போது அப்பகுதியில் உள்ள பெண்கள் தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு கழிப்பறையை இடிக்குமாறு பொதுப்பணித்துறை அதிகாரிகளை முற்றுகையிட்டனா். இதையடுத்து சம்பவ இடத்துக்கு கோட்டாட்சியா் சிவக்குமாா், டிஎஸ்பி. சிவசக்தி ஆகியோா் நேரில் வந்து அவா்களிடம் சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தி வேறு இடத்தில் கழிப்பறை கட்டித்தருவதாக தெரிவித்தனா். இதனையடுத்து கழிப்பறை இடித்து அகற்றப்பட்டது.