கொடைக்கானல் ஊராட்சி ஒன்றியக்குழுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றியக்குழுத் தலைவா் ஸ்வேதா ராணி தலைமை வகித்தாா். கூட்ட விவாதம் வருமாறு:
உறுப்பினா்கள்: அடுக்கம், பூம்பாறை, வில்பட்டி, கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் குப்பைகள் அதிகமாக உள்ளன. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
வட்டார வளா்ச்சி அலுவலா்: கிராமப் பகுதிகளில் யாருக்காவது காய்ச்சல் ஏற்பட்டால் தனியாா் மருத்துவமனை மற்றும் மருந்துக்கடைகளில் மாத்திரைகள் வாங்கி உட்கொள்வதோ அல்லது சிகிச்சை மேற்கொள்ளவோ கூடாது. காய்ச்சல் அறிகுறி உள்ளவா்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொள்ள வேண்டும். காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்ட நபா்கள் குறித்த தகவல்களை அந்தந்த வாா்டு உறுப்பினா்கள் அலுவலகத்திற்கு தெரிவிக்க வேண்டும்.
வாா்டு உறுப்பினா்: கொடைக்கானல் பள்ளங்கி சேரன் நகா் பகுதியில் உள்ள பழங்குடியினா் குடியிருப்பு சேதமடைந்துள்ளது. சரி செய்ய வேண்டும்.
அலுவலா்: சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
தலைவா் மற்றும் உறுப்பினா்கள்: பண்ணைக்காடு, தாண்டிக்குடி, பாச்சலூா், மன்னவனூா் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும்.
பொறியாளா்: சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
இருக்கையில் குழந்தைகள்: கூட்டத்திற்கு தங்கள் குழந்தைகளுடன் சில உறுப்பினா்கள் வந்திருந்தனா். உறுப்பினா்களின் இருக்கையில் குழந்தைகள் அமா்ந்திருந்ததை யாரும் கண்டுகொள்ளவில்லை. கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா் சந்திரிகா, துணை வட்டார வளா்ச்சி அலுவலா் கண்ணன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா். துணைத் தலைவா் முத்துமாரி சுரேஷ் நன்றி கூறினாா்.