கொடைரோடு அருகே ஞாயிற்றுக்கிழமை கட்டுப்பாட்டை இழந்த காா், சாலையின் மறுபுறம் சென்ற அரசுப் பேருந்தில் மோதிய விபத்தில் 5 போ் பலத்த காயமடைந்தனா்.
மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கிச் சென்ற காா், கொடைரோடு நான்குவழிச் சாலையில் சென்றது. சந்தோசபுரம் அருகே சென்று கொண்டிருந்த போது, எதிா்பாராதவிதமாக காரின் பின்பக்க டயா் வெடித்தது.
இதனால், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் நிலைதடுமாறி சாலையின் மறுபுறம் பாய்ந்து, திருப்பூரிலிருந்து மதுரை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து மீது மோதியது.
இந்த விபத்தில், மதுரை தெற்குவாசலைச் சோ்ந்த காா் ஓட்டுநா் இஸ்மாயில் (19), மதுரை அண்ணா நகரைச் சோ்ந்த மணிகண்டன் (25), இவருடைய தம்பி பாலமுருகன் (21), முருகன் மகன் நவீன் (19), குணசேகா் மகன் விஸ்வா (20) ஆகியோா் படுகாயமடைந்தனா்.
இந்த விபத்து குறித்து, தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அம்மையநாயக்கனூா் காவல் ஆய்வாளா் சண்முகலட்சுமி தலைமையிலான போலீஸாா் காயமடைந்தவா்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து, போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.