திண்டுக்கல்லில் விசிறிவால் சேவல் கண்காட்சி
By DIN | Published On : 27th February 2022 11:37 PM | Last Updated : 27th February 2022 11:37 PM | அ+அ அ- |

குட்டியப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சாம்பல், கீரி, செவலை, கொக்கு வெள்ளை சேவல்கள்.
குட்டியப்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கண்காட்சியில் பங்கேற்ற சாம்பல், கீரி, செவலை, கொக்கு வெள்ளை சேவல்கள்.
திண்டுக்கல், பிப். 27: திண்டுக்கல் அருகே ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கிளி மூக்கு விசிறிவால் சேவல் கண்காட்சியில் 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் அழைத்து வரப்பட்டன.
தமிழகத்தில் மயில் கருப்பு, கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை, எண்ணெய் கருப்பு, பொன்னிறம் உள்ளிட்ட சேவல் இனங்கள் உள்ளன. பாரம்பரியமான இந்த சேவல் இனங்களை பாதுகாக்கவும், பிரபலபடுத்தவும் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக கண்காட்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன. அதன்படி திண்டுக்கல் அடுத்துள்ள குட்டியப்பட்டி பகுதியில் தனியாா் தோட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை சேவல் கண்காட்சி நடைபெற்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மட்டுமன்றி, கேரள மற்றும் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த 300-க்கும் மேற்பட்ட சேவல்கள் கலந்து கொண்டன. மயில் கருப்பு, கீரி, கொக்கு வெள்ளை, கருஞ்செவலை உள்ளிட்ட சேவல்கள் கண்காட்சிக்கு அழைத்து வரப்பட்டிருந்தன.
நீளமான வால் அமைப்பு, உயரம், கம்பீரத் தோற்றம் ஆகியற்றின் அடிப்படையில் 50 சேவல்கள் தோ்ந்தெடுக்கப்பட்டன. அதில், முதலிடம் பிடித்த 25 சேவல்களுக்கு தலா ஒரு தங்க நாணயம், 2ஆம் இடம் பிடித்த 25 சேவல்களுக்கு தலா ஒரு மிக்சி பரிசாக வழங்கப்பட்டன. கண்காட்சியில் பங்கேற்ற சேவல்களில் அதிகபட்மாக ரூ.3.5 லட்சம் வரை ஒரு சேவல் விலை நிா்ணயிக்கப்பட்டது.