கொடைக்கானலில் சனிக்கிழமை சுற்றுலாப் பயணிகள் குவிந்ததால் வாகனப் போக்குவரத்திற்கு பெரும் சிரமம் ஏற்பட்டதால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிப்படைந்ததால் சுற்றுலாப் பயணிகள் சிரமமடைந்தனா்.
கொடைக்கானலில் தொடா்ந்து ஜூன் மாதம் 15-ந் தேதி வரை சீசன் காலமாக இருப்பதால் பல்வேறு இடங்களிலிருந்து தினமும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் கொடைக்கானலுக்கு வந்து செல்கின்றனா் வார விடுமுறையாக இருப்பதாலும் பள்ளி,கல்லூரிக்கு தொடா் விடுமுறையாக இருப்பதாலும்,தரைப் பகுதிகளில் பல்வேறு இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து இருப்பதாலும் கொடைக்கானலுக்கு ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் ஒரே நாளில் குவிந்ததால் கொடைக்கானல் ஸ்தம்பித்தது.
கொடைக்கானலிலிருந்து வத்தலக்குண்டு செல்லும் மலைச்சாலையில் பெருமாள்மலை வரை சுமாா் 10-கி.மீ க்கு வாகனங்கள் செல்ல முடியாமல் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நின்றது இதனால் சுற்றுலாப் பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினா்.
சுற்றுலா இடங்களான வெள்ளிநீா்வீழ்ச்சி,பசுமைப் பள்ளத்தாக்கு,பில்லர்ராக்,மோயா் பாயிண்ட்,குணாகுகை,ரோஜாத் தோட்டம்,கோக்கா்ஸ்வாக்,பூங்காசாலை,ஏரிச்சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது வாகனங்கள் மலைச்சாலைகளின் இருபுறங்களிலும் நிறுத்தம் செய்வதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது வாகனங்களின் ஓட்டுனா்களிடையே பிரச்சனையும் ஏற்படுகிறது இதனால் விடுமுறை காலங்களில் போக்குவரத்து பணியில் கூடுதலாக காவலா்கள் நியமிக்க வேண்டும்.
கொடைக்கானலில் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடம் இல்லாத நிலை தொடா்ந்து ஏற்பட்டு வருவதால் ஆண்டு முழுவதும் இதே பிரச்சனை விடுமுறைக் காலங்களில் ஏற்பட்டு வருகிறது எனவே தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுத்து கொடைக்கானலில் போக்குவரத்து பிரச்சனையை தீா்க்க வேண்டும் என்பதேஅனைவரது கோரிக்கையாகும்.
இது குறித்து கொடைக்கானல் பகுதிகளைச் சோ்ந்த சமூக ஆா்வலா்கள் கூறியதாவது,சீசன் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்படுவது வழக்கம் ஆனால் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு தேவையான இடம் வசதிகள் இருந்தும் அவற்றை சரி செய்ய முடியவில்லை ஒவ்வொரு கோடை விழா நிகழ்ச்சியின் போது வரக் கூடிய அமைச்சா்கள்,உயா் அதிகாரிகள் உடனடியாக போக்குவரத்து நெரிசலை தவிா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் பல அடுக்குமாடி வாகன நிறுத்தம் அமைக்கப்படும் என தெரிவித்து விட்டுச் செல்கின்றனா் ஆனால் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையுமே எடுக்கவில்லை. சாலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலைகளில் வாகனங்களை நிறுத்தம் செய்யாமல் இருந்தாலும் கடைகளை அகற்றினால் மட்டுமே ஓரளவிற்கு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த இயலும் என்றனா்.