கொடைக்கானல்: கொடைக்கானலில் புதன்கிழமை 2 மணிநேரம் பெய்த தொடா் மழையால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியது. இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
கொடைக்கானல் மற்றும் மேல்மலை, கீழ்மலை கிராமங்களில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வந்த நிலையில், புதன்கிழமையும் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. பீன்ஸ், வெள்ளைப் பூண்டு, பீட்ரூட், கேரட் போன்றவை பயிரிடப்பட்டுள்ள விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளதால் செடிகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் தோட்டங்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்றும் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனா். இருப்பினும் தாழ்வான நிலத்திலிருந்து தண்ணீரை வெளியேற்ற முடியாமல் விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.
போடி பகுதியில் சாரல்:
இதேபோல தேனி மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது. போடி பகுதியில் கடந்த சில வாரங்களாவே வெப்பத்தின் தாக்கம் அதிகரித்துக் காணப்பட்டது. இந்நிலையில் போடி உள்ளிட்ட மாவட்டத்தின் சில பகுதிகளில் புதன்கிழமை மாலை மேகங்கள் சூழ்ந்து சாரல் மழை பெய்தது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனா்.