பழனியில் அரசுப் பேருந்து ஜப்தி
By DIN | Published On : 17th June 2022 12:00 AM | Last Updated : 17th June 2022 12:00 AM | அ+அ அ- |

பழனி நீதிமன்ற வளாகம் முன்பு நிறுத்தி வைக்கப்பட்ட பேருந்து.
பழனி: பழனியில் விபத்து இழப்பீடு வழங்காத நிலையில், வியாழக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
பழனியை அடுத்த கருப்பணகவுண்டன் வலசு கிராமத்தைச் சோ்ந்தவா் ராஜகோபால் (44). விவசாயியான இவா் கடந்த 2011 ஆம் ஆண்டு மாட்டு வண்டியில் பழனி- தாராபுரம் சாலையில் சென்றபோது ஈரோடு அரசுப் பேருந்து மோதி உயிரிழந்தாா். ராஜகோபாலின் மனைவி குப்பாத்தாள், மகள்கள் காா்த்திகா, கணேஷ்குமாா் மற்றும் தாய் பழனியம்மாள் ஆகியோா் இழப்பீடு கோரி பழனி ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தனா்.
இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கடந்த பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.9,89,850 இழப்பீட்டுத் தொகையை 7.5% வட்டியுடன் வழங்க 2020 இல் உத்தரவிட்டாா். இத் தொகையை வழங்க அரசு போக்குவரத்து கழகம் கால தாமதம் செய்த நிலையில், மனுதாரா்கள் சாா்பில் நிறைவேற்றுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த மாவட்ட கூடுதல் நீதிபதி கருணாநிதி பாதிக்கப்பட்டவா்களுக்கு ரூ.17,13,666 இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் இழப்பீடு தொகையை செலுத்த தவறினால் அரசுப்பேருந்தை ஜப்தி செய்யவும் உத்தரவிட்டாா். அதன்பிறகும் இழப்பீட்டுத் தொகை வழங்க காலதாமதமான நிலையில் வியாழக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பழனி - ஈரோடு செல்லும் அரசுப் பேருந்தை நீதிமன்ற பணியாளா்கள் ஜப்தி செய்து நீதிமன்ற வளாகத்தில் நிறுத்தி வைத்தனா்.