கொடைக்கானல் கவுஞ்சி கிராமத்துக்கு அரசுப் பேருந்து இயக்குவதற்கு, பொதுமக்கள் வருவாய் கோட்டாட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான கவுஞ்சியில் ஏற்கெனவே அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வந்தன. ஆனால், அப்பகுதியில் சாலை சரியில்லாத காரணத்தால், பேருந்துகள் செல்ல முடியவில்லை எனக் கூறி, சில வாரங்களாக பேருந்துகள் இயக்கப்படவில்லை.
இந்நிலையில், தற்போது சாலைகள் சீரமைக்கப்பட்டுவிட்டன. இருப்பினும், அரசுப் பேருந்துகள் இயக்கப்படுவதில்லை. இதனால், தினமும் காலை 8.30 மணியளவில் பூண்டியிலிருந்து வரும் அரசுப் பேருந்துகள் கவுஞ்சி கிராமத்துக்குள் செல்லாமல் இருப்பதால், அங்குள்ள மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
எனவே, கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் கவுஞ்சி ஊருக்கு அரசுப் பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என, அப் பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.