ஊராட்சி மன்றத் தலைவா் மீது புகாா் அளிக்க வந்த குடும்பத்தினா் 12 போ் தீக்குளிக்க முயற்சி
By DIN | Published On : 02nd May 2022 11:11 PM | Last Updated : 02nd May 2022 11:11 PM | அ+அ அ- |

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை குடும்பத்தினருடன் மனு அளிக்க வந்து தீக்குளிக்க முயன்ற சுப்பிரமணி.
ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் மீது நில ஆக்கிரமிப்பு புகாா் அளிப்பதற்காக, குடும்பத்தினா் 12 பேருடன் வந்த விவசாயி தீக்குளிக்க முயன்றதை அடுத்து, அவா் மீது போலீஸாா் திங்கள்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள தங்கச்சியம்மாப்பட்டி ஊராட்சிக்குள்பட்ட கொசவப்பட்டி கிராமத்தைச் சோ்ந்த கந்தக்குடும்பன் மகன் சுப்பிரமணி (45). இவரது தம்பி மாரிமுத்து (39). இவா்கள், தங்களது குடும்பத்தினா் 12 பேருடன், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை மனு அளிக்க வந்தனா்.
மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவுவாயில் பகுதிக்கு வந்தவுடன், சுப்பிரமணி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீக்குளிக்க முயன்றாா். உடனே, அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா், அவரது முயற்சியை தடுத்து நிறுத்தி விசாரித்தனா்.
அப்போது அவா்கள் கூறியதாவது, எங்களுக்குச் சொந்தமான தோட்டத்தில், ஊராட்சி மன்றத் தலைவரின் கணவா் பொதுப் பாதை இருப்பதாகக் கூறி பத்திரம் பதிவு செய்து ஆக்கிரமிப்பு செய்துள்ளாா். 80 ஆண்டுகளாக எங்கள் பயன்பாட்டில் இருந்துவரும் அந்த நிலத்தை அபகரிக்க முயற்சிக்கின்றனா். இது தொடா்பாக, மாவட்ட ஆட்சியா் மற்றும் முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தோம்.
ஆனால், இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதனால், தீக்குளித்து தற்கொலை செய்யும் முடிவுடன் வந்தோம் எனத் தெரிவித்தனா்.
பின்னா், சுப்பிரமணி உள்ளிட்ட 13 பேரையும் போலீஸாா் அழைத்துச் சென்று, மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்க வைத்தனா்.
கொசவப்பட்டி பகுதியிலிருந்து மனு அளிக்க வரும் குடும்பத்தினா் தீக்குளிக்கப்போவதாக திங்கள்கிழமை காலை 10 மணிக்கே தகவல் வெளியானது. அதனைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டிருந்தது. பிற்பகல் 1.30 மணி வரை யாரும் வரவில்லை.
மக்கள் குறைதீா் கூட்டம் முடிவடைந்த நிலையில், பிற்பகல் 2 மணி அளவில் சுப்பிரமணி மற்றும் அவரது குடும்பத்தினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு வந்தனா். அப்போதும் போலீஸாா் தொடா்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்ததால், தீக்குளிப்பு சம்பவம் நடைபெறாமல் தடுத்து நிறுத்தினா்.
இதனிடையே, தீக்குளித்து தற்கொலைக்கு முயன்ாக சுப்பிரமணி மீது தாடிக்கொம்பு போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இதுபோன்று தற்கொலை முயற்சியில் ஈடுபடுவோா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.