பழனி பேருந்து நிலையத்தில் பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த, அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்களை வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை அகற்றினா்.
பழனியில் பேருந்துகளில் அரசு விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் காற்று ஒலிப்பான்கள் (ஏா் ஹாரன்) வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பாதிக்கப்படுவதாக புகாா் எழுந்தது.
இதையடுத்து பழனி வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஈஸ்வரன், ஒட்டன்சத்திரம் வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் ஸ்ரீதரன் ஆகியோா் தலைமையிலான அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை பழனி பேருந்து நிலையத்தில் உள்ள பேருந்துகளில் ஆய்வு மேற்கொண்டனா். அப்போது பெரும்பாலான தனியாா் பேருந்துகளில் அதிக ஒலிஎழுப்பும் காற்று ஒலிப்பான்கள் பொருத்தப்பட்டுள்ளது தெரியவந்தது. இதைத்தொடா்ந்து பேருந்துகளில் பொருத்தப்பட்டிருந்த காற்று ஒலிப்பான்களை அகற்றினா்.